Tuesday, August 23, 2016

மாதவிலக்கும், வெள்ளை படுதலும்

மாதவிலக்கும், வெள்ளை படுதலும்

 பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் மாதவிலக்கு தொடர்பில் உள்ள பிரச்சினைகளுக்கு சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்ந்து கொள்வதுதான் இந்தத் தொடரின் முதன்மையான நோக்கம் என்றாலும் கூட, இது ஒரு நோய், பெண்களுக்கான சாபம், தீராத துன்பம், தீட்டு என காலம் காலமாய் பலவாகிலும் கட்டமைக்கப் பட்ட கருத்தாக்கங்களை களைந்து, மாதவிலக்கு என்பது சாதாரணமான உடல் இயங்கியல் நிகழ்வு என்பதனை அனைவரும் உணர்ந்திட வேண்டியே இத்தனை நீளமான அடிப்படை விளக்கங்களை எழுதிட நேர்ந்தது. சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்வதற்கு முன்னர், இரண்டு நண்பர்கள் மின்னஞ்சலில் எழுப்பியிருந்த கேள்விகளுக்கான பதிலாய் இன்றைய பதிவு அமைகிறது. அந்த கேள்வி இதுதான்....வெள்ளை படுதல் எனப்படும் வெள்ளை ஒழுக்கும், மாதவிலக்கும் ஒன்றா?, வெவ்வேறென்றால் வெள்ளைப் படுதல் என்பது என்ன?. எப்படி நமது கண்கள், காதுகள், வாய், ஆசனவாய் போன்ற உறுப்புகள் உடலின் வெளிப்புறத்திற்கும், உள் உறுப்புகளுக்கும் பாலமாய் அமைந்திருக்கின்றனவோ, அதைப் போலவே நமது பிறப்பு உறுப்பும் வெளிப்புறத்திற்கும், உள் உறுப்புகளுக்கும் பாலமாய் அமைந்திருக்கிறது. நமது வாயில் உமிழ்நீர் சுரந்து வாயின் உட்புற அமைப்பினை பராமரிப்பது போல, நமது பிறப்பு உறுப்பும் இயல்பாகவே ஒரு நீர்மத்தை சுரந்து பிறப்புறுப்புகளை பராமரிக்கிறது. இந்த நீர்மம் நிறமற்றதாகவும், மணமற்றதாகவும் இருக்கும். நாளொன்றிற்கு நான்கு மில்லி லிட்டர் வரை சுரக்கும். இது எல்லா வயதினருக்கும் இயல்பாக நிகழக் கூடிய ஒன்றுதான். எனவே மாதவிலக்கும், வெள்ளைப் படுதலும் அடிப்படையில் வெவ்வேறானவை.  எனினும், உடல் நல பாதிப்புகள், உடல் இயங்கியலில் ஏற்படும் மாற்றங்கள், நோய்த் தொற்று பாதிப்பு போன்றவைகளால் இந்த நீர்மம் இயல்பைவிட அதிகமா வெளியேறும். இந்த நீர்மம் வழவழப்பாகவும், வெள்ளை, மஞ்சள், பச்சை நிறத்திலும், குருதி கலந்த நிலையிலும் வெளியேறும். தீவிரமான நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு மிகுந்த துர் நாற்றத்துடனும் நுரைத்த நீர்மமாகவும், தக்கை தக்கையாவும், இறுகிய நீர்மமாகவும் வெளியேறும். இதனையே வெள்ளை படுதல் என்கிறோம். மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னர், மாதவிலக்கு முடிந்த பின்னர், கருத்தரித்த சமயங்களில், குழந்தை பேற்றிற்கு பின்னர், கருத்தடை சாதனங்கள், மருந்துகளை உட்கொள்ளும் போது, நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் போது, முறையற்ற பாலியல் பழக்கங்கள் என பல்வேறு காரணங்களினால் இத்தகைய வெள்ளை ஒழுக்கு ஏற்படுகிறது. மொத்தத்தில் உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்த் தொற்று, மற்றும் உடலின் அமில, காரத் தன்மையில் ஏற்றத்தாழ்வு ஆகியவையே அதிகமான வெள்ளை போக்கினை உருவாக்குகின்றன. மேலும் ஒருவரின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் இது மாறுபடுகிறது.  முறையான உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, அழுத்தங்கள் இல்லாத வாழ்வியல் சூழல் போன்றவையே இதற்கு நீண்டகால தீர்வாக அமையும். எனினும் ஆரம்ப நிலையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஆரம்ப நிலையில் மருத்துவம் செய்வதன் மூலம் எளிதில் குணப்படுத்தி விடக் கூடிய ஒன்றுதான் வெள்ளை படுதல். இனி வரும் பதிவுகளில் மாதவிலக்கு பிரச்சினைகளை எதிர்கொள்வது மற்றும் சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகள் குறித்து பார்ப்போம். 

No comments:

Post a Comment