Saturday, November 19, 2016

சீந்தில் கொடி.

சீந்தில் கொடி.


1) மூலிகையின் பெயர் -: சீந்தில் கொடி.


2) தாவரப்பெயர் -: TINOSPORA CARDIFOLIA.


3) தாவரக்குடும்பம் -: MENISPERMACEAE.


4) வேறு பெயர்கள்-
அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி சஞ்சீவி, ஆகாசவல்லி போன்றவை.(GUDUCHI).


5) பயன் தரும் பாகங்கள் -:
கொடி, இலை மற்றும் வேர்.


6) வளரியல்பு - :

சீந்தில் கொடி தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. வரட்சியைத் தாங்கக்கூடியது.உயரமான மரங்களில் காடுகளில் அதிகமாகப் படரும் ஏறு கொடி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடியில் வளரக் கூடியது.

இதய வடிவ இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும் காகிதம் போன்ற புறத் தோலையும் உடைய ஏறு கொடி. கொடியின் தரை தொடர்பு அகற்றப் பட்டால் கொடியின் மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடிதழைக்கும்.

 இது கோடையில் பூக்கும். பூ ஆண், பெண் என்ற இருவகையுண்டு. மஞ்சள் நிரத்தில் இருக்கும்.  பெண் பூ தனியாக இருக்கும். அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் உண்டாகும். விழுதுகள் 30 அடி நீளங்கூட வளரும். விதையை விட தண்டு கட்டிங் மூலம் இனப் பெருக்கம் சிறப்பாக இருக்கும்.


7) மருத்துவப்பயன்கள் -:

முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நல்ல நீரில் கரைத்து வடிகட்டி அசையாது சில மணி நேரம் வைத்திருந்து நீரை வடித்துப் பார்க்க அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். மீண்டும் நீர் விட்டுக் கரைத்து தெளிய வைத்து இறுத்து எடுத்து உலர்த்தி வைக்கப் பளிச்சிடும் வெண்ணிறப் பொடியாயிருக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப் படும். இது ஓர் கற்ப மருந்தாகக் கருதப்படுகிறது. உணவுக் கட்டுப் பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட பல பிணிகளும் நீங்கும் என்பதாம்.

சீந்தில் உடற்பலம், சிறுநீர், காமம், தாய்ப்பால், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கும்.

முறை நோய் மஞ்சள் காமாலை, வாதம், கேன்சர், அல்சர், ஈரல் நோய் ஆகியவை தீர்க்கும், உடல் தேற்றும்.


சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவைகளை உரம் பெறச் செய்யும். பிற மருந்தின் சேர்கையுடன் நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, காய்ச்சல்,மூர்ச்சை ஆகியவற்றைத் தீர்க்கலாம்.

சீந்தில் கொடி, நெற்பொறி வகைக்கு 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 150 மில்லியாக வற்றக் காய்ச்சிக் காலை, மதியம், மாலையாக 50 மி.லி. யாகக் குடித்து வர மேக வெப்பம், தாகம் தீரும்.


முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும்.

 பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால் அசதி, மிகுதாகம், உடல் மெலிவு, விரல்களில் சுருக் சுருக்கென்று குத்துதல் ஆகியவை தீரும்.

-பிரசவத்தின் போது சாகாமூலி என்ற சீந்தில் கொடியின் சிறு துண்டை தாயின் கால் கட்டை விரலில் கட்டி விடுவர்.இதனால் பிரசவகாலத்தில் தாய், சிசு இருவரும் நலமாக பிறக்கின்றனர். பிறக்கும் குழந்தைக்கு எந்த நோய் கிருமியும் தாக்கப்படுவதில்லை. இது உண்மை இன்று கிராமபுறங்களில் இதை செய்கின்றனர்.அதனால் தான் இதற்கு சாகா மூலி என்ற பெயர் வந்துள்ளது.


பெண்களை அதிகமாக தாக்கக்கூடியது மார்பக புற்றுநோய். இந்த நோயில் இருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என்று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும்.

 சித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு. பெயரைக் கேட்டாலேயே நடுநடுங்க வைக்கும் எய்ட்ஸ் மற்றும் வெட்டை, மேகம் போன்ற கொடிய நோய்களை குணமாக்கும் மருந்து வஞ்சிக் கொடியில் உள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கு வஞ்சிக் கொடியை சாப்பிட கொடுப்பதும் அந்த கால வழக்கமாகும்.

 வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும் மேற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப்பட்டுள்ளது.

மார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப்பின் காரணமாக உருவாகும் மஞ்சள் காமாலை, காச நோய்களில் இருந்து நோயாளிகளை பாதுகாக்கக்கூடிய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது.

சிறு உபாதைகளான மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும். இந்த கொடி கசப்புச் சுவை கொண்டது. ஏதாவது ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு ஒட்டுண்ணியாகப் படரக்கூடியது.

ஆலமரத்தைப் போலவே இதன் பிரதான கிளைகளிலிருந்தும் மெல்லிய கிளைகள் விழுதுகள் போலத் தொங்குகின்றன.
தண்டுப் பகுதியில் ஆங்காங்கே வெண்மை வண்ணத்தில் சில முண்டுகள் தெரிகின்றன. வெற்றிலையைப் போன்ற தோற்றம் கொண்டவை இதன் இலைகள். சீந்தில் கொடியின் அனைத்துப் பாகங்களும் கசக்கும்

சீந்தில் நம் நாட்டிலும், மற்றும் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளான பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலும் அதிகமாக பயிரிடப்படும் மூலிகையாகும். இதற்கு சோமவல்லி, அமிர்த வல்லி, அமிர்தை, அமிர்தக் கொடி, குண்டலி சீந்திற் கிழங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.

சீந்தில் இலை வெற்றிலைப் போல பச்சை நிறமாக இருக்கும். பழம் சிவப்பாகவும் சிறியதாகவும் இருக்கும் இது மற்ற மரங்களின் மீது படர்ந்து வளரும் கொடியினத்தைச் சார்ந்தது.

சீந்திலின் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் தொங்கும். இக்கொடியின் இலை,கொடி,வேர், சமூலம் என் அனைத்து பாகங்களும் மருந்துவத்திற்கு பயன்படுகின்றது.

சீந்திலின் கொடியை அறுத்து விட்டாலும் இலைகள் வாடாமல் பசுமையாக இருக்கும். அதனால் இதற்கு “சாகா மூலிகை” என்ற பெயர் வந்தது.

சாதாரணமாக சீந்தில் கொடிக்கு கோடை காலத்தில் அதிக சத்து இருக்கும். மழை மற்றும் பனிக்காலங்களில் சத்து மிகவும் குறைந்து காணப்படும்.

சீந்தில் இலை:-

சீந்திலின் இலையை அனலில் வாட்டி, புண்கள் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் குணமடையும். மேலும் இதன் இலையை அரைத்து கோடை காலங்களில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெறும் வயிற்றில் காலை வேளையில் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குணமாகும்.

சீந்தில் கொடி:-

முற்றிய கொடி இளம் கொடியை விட நிறைய பலன்களைத் தரும். அதாவது முற்றிய கொடியில் கைப்பு தன்மை அதிகம் இருக்கும். முதிர்ந்த கொடியைக் கோடைகாலத்தில் சேகரிக்க வேண்டும். மற்ற காலங்களில் சேகரிக்கப்படுவதற்கு இக்குணம் நிறைந்திராது.

நன்றாக முற்றிய சீந்தில் கொடி இடித்தது -
35 கிராம்

கொத்தமல்லி                             - 20 கிராம்
சுக்கு                                      - 20 கிராம்
அதிமதுரம், சோம்பு                   - தலா 10 கிராம்

எடுத்து இடித்து எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஒரு லிட்டர் விட்டு கொதிக்க வைத்து கால் லிட்டராக சுண்ட வைத்து, வடிகட்டி காலை, மாலை இரு வேளை மூன்று நாட்கள் குடித்து வந்தால் அஜீரணம், வயிறு உப்புசம், நாட்பட்ட வாதம், பலக்குறைவு முதலியன குணமாகும்.

சீந்தில் சர்க்கரை:-

கோடைக்காலத்தில் முற்றிய சீந்தில் கொடியை இடித்து, அதில் 5 படி தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து, ஒரு நாள் முழுவதும் வைத்து, அதை தெளிய வைத்து விடவும். பிறகு அந்த தெளிந்த நீரை, கீழே ஊற்றி விட்டு அடியில் உள்ளதை மட்டும் எடுத்து, தண்ணீரை விட்டு கலக்கித் தெளிய விட வேண்டும்.

இது போல் ஐந்தாறு தடைவ செய்து கடைசியாக திப்பிலை நீக்கி நீரை அசையாமல் வைத்து தெளிவினை இறுத்து காய வைத்து எடுத்தால் நமக்கு சீந்தில் சர்க்கரை கிடைக்கும்.

இந்த சீந்தில் சர்க்கரையை வாயில் வைத்தால் சுவை இல்லாமலிருக்கும். இதை மற்ற மருந்துகளுடன் அனுபானமாக கொடுக்கலாம். மேலும் இது கல்லீரல், நுரையீரல் மற்றும் மண்ணீரலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.

சீந்தில் புகை:-

உடல் மெலிந்து மிகவும் நலிவுடன் இருப்பவர்கள் சீந்தில் கொடியை தீயிலிட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்தால் உடல் பலத்தை பெறுவார்கள்


 சீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

சீந்தில்  தண்டுகளைக் காய வைத்து ஒரு தேக்கரண்டி பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து  வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை ஆகிய துன்பங்கள் விலகும். காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து.

சீந்தில் கொடியை இடித்து குளிர் நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருந்தால் நீர் தெளிந்துவரும். அந்த தெளிந்த நீரை வடிகட்டிவிட்டு புதிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். இப்படி பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். (இந்த சீந்தில் சர்க்கரை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது.)

 இந்த சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும்.

சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி, இளஞ்சூட்டோடு புண்களின் மேல் போட்டுவர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும்.

சீந்தில் கொடி 35 கிராம் அளவு எடுத்து நசுக்கி அதனோடு  கொத்தமல்லி, அதிமதுரப்பொடி வகைக்கு 4 கிராம் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனோடு 300 மி.லி. நீர் சேர்த்து சோம்பு, பன்னீர் ரோஜாப்பூ ஆகியன தலா 10 கிராம் சேர்த்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி வைத்துக்கொண்டு 25 மி.லி. முதல் 50 மி.லி. வரை தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் வயிற்று உப்புசம், நாள்பட்ட செரிமானமின்மை, வயிற்றைப் பாதித்துத் துன்பம் செய்கிற பல்வேறு நோய்களும் விலகும்.

சீந்தில் கொடியோடு நெற்பொரி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டுக் காய்ச்சி, 150 மி.லி. ஆகச் சுண்டச் செய்து தினமும் இருவேளை 50 மி.லி. அளவு குடித்துவர மேகச்சூடு, நாவறட்சி நீங்கும். எந்த சிரமுமின்றி வீடுகளில் வளரக் கூடிய சீந்தில் எனும் அமிர்தத்தை நாமும் பயன்படுத்திக் கொள்வோம்!

மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என
எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி

4 comments:

  1. மிக மிக தேவையான தகவல்கள் நன்றி

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல மருந்து நல்ல பதிவு

    ReplyDelete