Monday, February 16, 2015

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்
*****************************************************

நம் முன்னோர்கள் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற ரீதியில் தங்கள் உணவு பழக்கத்தை வைத்திருந்தனர். அதனால்தான் அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். இன்றைய நவீனஉலகமும், இயந்திரத்தனமான வாழ்க்கையும் அத்தகைய உணவு பழக்கத்தை நம்மை விட்டு தள்ளி விட்டுள்ளது. அதனால்தான், வாழ்க்கையின் குறிப்பிட்ட நாட்களை மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையில் தவித்து வருகிறோம். அந்த வகையில் நமது முன்னோர்களின் உணவில் முக்கிய பங்கு வகித்த வெந்தயத்தின் மகிமை அலாதியானது.

வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டாது.

இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது. ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம். வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடல் குளிர்ச்சிக்கு:

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடைய செய்வதோடு, தாய்ப்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாக குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்னையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்தால், முடி உதிர்வது குறைவதுடன், அடர்த்தியாக முடி வளரவும் செய்கிறது. பொடுகு பிரச்னை, அரிப்பு குறைவதோடு முடியை பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும். ஆகவே, வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்

2 comments: