Wednesday, March 23, 2016

'அடடே' அதிமதுரம்!

'அடடே' அதிமதுரம்!

மதுரம் என்றால் இனிமை. உடலுக்கு இனிமை கொடுக்கும் இயற்கையின் வரப் பிரசாதம்தான் அதிமதுரம். இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம்!

கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.

நரம்புத் தளர்ச்சி போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அருமருந்தாகப் பயன்படும் அதிமதுரம், தலை முடி வளர்ச்சிக்கும் தலையாய மருந்து!

நன்றாகச் சுத்தம் செய்த அதிமதுர வேரை முதலில் இடித்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். 50 கிராம் அதிமதுரப் பொடியுடன், 10 கிராம் மிளகுத் தூள் சேர்க்க வேண்டும். இதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டால், இருமல் தணியும். அதிமதுர வேர் துண்டினை அப்படியே வாயில்வைத்துச் சுவைக்க வறட்டு இருமல், தொண்டைக் கரகரப்பு நீங்கும்.

50 கிராம் அதிமதுர வேரை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் லிட்டராகும் வரை கொதிக்கவிட வேண்டும். இதில் 150 கிராம் சர்க்கரையும் 250 மி.லி. பசும்பாலும் சேர்த்துப் பாகுபதமாகக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். சூடு ஆறியதும், அதில் இருந்து 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் வெந்நீரில் கலந்து இரண்டு வாரங்கள் காலை-மாலை எனத் தொடர்ந்து சாப்பிட்டால், வயிற்றுப் புண் குணமாகும்.

அரை டீஸ்பூன் அதிமதுர வேர்த் தூளுடன் தேன் கலந்து, காலை-மாலை இரு வேளையும் தவறாமல் 48 நாட்கள் உட்கொண்டால், நரம்புத் தளர்ச்சி, அசதி நீங்கி ஆண்மை பெருகும்.

தலைவலி தணிய...

அதிமதுர வேர்த்தூளுடன் பெருஞ்சீரகத் தூளை சம அளவு கலந்து, அதில் இருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து வெந்நீருடன் சாப்பிட்டால், தலைவலி, ஒற்றைத் தலைவலி எல்லாம் ஓடிவிடும்!

No comments:

Post a Comment