Tuesday, June 28, 2016

வாழை மரம்

வாழை மரம்
Image result for வாழை மரம்
வெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும்.

வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக் கண்டங்களான ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பரவியது.


வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 லட்சம் டன் வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி எனற எதுவும் வீணாகாது.

மேலும், வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகின்றன. வாழை வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன.

ஜப்பானில் பாரம்பரிய கிமானோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன

வாழைக்கும் தமிழர்களுக்குமான உறவு வாழையடி வாழையாகத் தொடர்வது. இலை, தண்டு, பூ, காய் மற்றும் பழம் என ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவப் பலன்களைப் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தாவரம் வாழை.

இவை ஒவ்வொன்றின் சத்துக்கள் பற்றியும் யார் யார் சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போமானால்.

வாழைப் பூ –

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம்.

வாரம் இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். செரிமானக் கோளாறு இருக்கும் போது வாழைப்பூ உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

வாழைக் காய் –

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.

 வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய் வறுவல் மற்றும் வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இல்லையெனில் வயிறு மந்தமாகிவிடும்.

 செரிமானக் கோளாறு உள்ளவர்கள் மூட்டு வலி இருப்பவர்கள் உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.

வாழைப் பழம் –

அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம் இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

சிலர் வாழைப் பழத்தை பால் தயிருடன் சேர்த்து மில்க்‌ஷேக் ஆக குடிக்கிறார்கள். இது தவறு. வாழைப்பழத்தை எந்தப் பொருளுடனும் கலந்து உண்ணக் கூடாது.

 ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகள் தவிர அனைவருமே வாழைப்பழத்தை தினமும் உண்ணலாம்.

வாழைத் தண்டு –

உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை.

 சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கவும் அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது. வாரத்துக்கு நான்கு முறையாவது வாழைத்தண்டைக் கட்டாயம் சாறாகவோ பொரியலாகவோ அல்லது அவியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத் தண்டு சூப்பை கடைகளில் வாங்கிக் குடிப்பதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டு மிளகு அல்லது சீரகத்தூள் சேர்த்து வீட்டிலேயே வாழைத்தண்டு சூப் வைத்து அருந்தலாம்.

 உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு சேர்க்காமல் வாழைத் தண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழை இலை –

வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்பு மற்றும் மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதனால் வாழை இலையில் உணவை வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம்.

வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும்போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. இதில் பாலிபீனால் இருப்பதால் நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது.

எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து தினமும் வாழை இலையில் உண்ணுவது சிறந்தது

No comments:

Post a Comment