Wednesday, March 18, 2015

சரஸ்வதி மூலிகை’ (வல்லாரை)

சரஸ்வதி மூலிகை’ (வல்லாரை)
*************************************************
மூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வரும் வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம்.
அவை பற்றி…
1. வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.
2. வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
3. வல்லாரை இலையுடன் சம அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.
4. குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.
5. ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரையை ‘சரஸ்வதி மூலிகை’ என்றும் அழைக்கின்றனர்.
6. வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
7. வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.
8. இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.
9. வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.
10. நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.
11. யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். அதுபோல விரை வீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும்.
12. வல்லாரை இலையை முறைப்படி எண்ணையாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்


நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்
*****************************************************
இன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை
நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை
இவைகள் முக்கிய அறிகுறிகளாகும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்ட பெண்கள் மிகவும் பாதிக்கப்
படுகின்றார்கள். அடிக்கடி அழுவதும், சிரிப்பதும், பயித்தியம் போல் நடப்பதும் உண்டு.
எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகள் காலை மாலை உணவுடன் இனிப்பு வகைகளை
சேர்த்துக் கொள்ளுதல் நல்ல உடைகள், வாசனைப் பொருட்கள் கொள்ளுதல் பூந்தோட்டங்களில்
கடற்கரையில் உலாவுவது என அவர்கள் மனோ நிலை எப்போதும் சந்தோஷ சூழலில்
வைத்திருப்பது அவசியம். அன்பும், அரவணைப்பும் அவர்களுக்கு ஆறுதல் தரும்.
சித்த மருந்து
----------------------
அமுக்கிராக் கிழங்கு – ஐந்நூறு கிராம்.
மிளகு – இருபத்தி ஐந்து கிராம்.
சுக்கு – இருபத்தி ஐந்து கிராம்.
அதிமதுரம் – இருபத்தி ஐந்து கிராம்.
ஏல அரிசி – இருபத்தி ஐந்து கிராம்.
சாதிக்காய் – இருபத்தி ஐந்து கிராம்.
தேன் – ஒரு கிலோ.
பால் – அரை லிட்டர்.
அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.நல்ல
ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப்
பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது
நிமிடங்கள் சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும். மற்ற
மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும். எல்லா
பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.
ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] மேற்கண்ட எல்லாப் பொடிகளையும்
சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்
உண்ணும் முறை
-----------------------------
காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி
அளவும் உட்கொண்டு பால் அருந்தவும். நாற்பத்தெட்டு நாட்கள் உண்ண வேண்டும்.
பத்தியம்
--------------
குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவேத் தவிர்க்கவும்.

பிரண்டை

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடியாகும்.
இதில் ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன.
முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும்.
இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
Tamil - Pirandai
English - Bone-setter
Telugu - Nalleru
Malayalam - changalam paranda
Sanskrit - Astisringala
Hindi - Hadjora
Botanical Name - Cissus quadrangula
பிரண்டையை நெய் யால்வறுத்துப் பின்னரைத்து மாதே
வெருண்டிடா தேன்று விழுங்கில்- அரண்டுவரும்
மூலத் தினவடங்கும் மூலவி ரத்தமறும்
ஞாலத்தி னுள்ளே நவில்
- அகத்தியர் குணபாடம்
உடல் தேற
சிலர் உடல் மெலிந்து எப்போதும் சோகமாகக் காணப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
வயிற்றுப் பொருமல் நீங்க
வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.
இரத்த மூலநோய் குணமாக
மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.
செரிமான சக்தியைத் தூண்ட
சிலருக்கு மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
முதுகு வலி, கழுத்து வலி குணமாக
சிலர் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இவர்களின் எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.
இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.
இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.
எலும்பு முறிவுக்கு
எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.
இதயம் பலப்பட
உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர் களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன.
பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.
பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.
பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.
கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு !!!

மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு !!!

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.
மூட்டழற்சி:
இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
முடக்குவாதம்:
இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.
மூட்டழற்சியின் அறிகுறிகள்:
நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதத்தின் அறிகுறிகள்:
இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.
காரணம்:
முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.
கைவைத்தியம்:
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.
6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.
7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

அரைக்கீரை !!!

அரைக்கீரை !!!

கீரை தேவை

தமிழர்களின் உணவில் இன்றியமையாத தாவிர உணவு கீரைகள். பச்சைப்பசேல் என்றிருக்கும் பல கீரை வகைகள் தமிழகத்தில் எங்கும் கிடைக்கின்றன. காய்கறிகளை பொதுவாக இலை, பூ, காய், தண்டு, கிழங்கு என்று 5 வகையாக பிரிக்கலாம். இவற்றில் எளிதாகவும், விரைவாகவும் ஜீரணமாவது கீரைகள் தான். தமிழகத்தில் மட்டுமல்ல, நமது தேசம் முழுவதுமே கீரைகள் விரும்பி உண்ணப் படுகின்றன. கீரைகளில் கால்சியம், இரும்பு, பீடா - கரோடின், விட்டமின் 'சி', ரிபோஃப்ளேவின் (விட்டமின் பி2), ஃபோலிக் அமிலம். போன்றவை அதிகம் உள்ளன. கீரைகளில் பச்சயம் (Chlorophyll) நிறைந்திருக்கிறது. லெசித்தின் கரோட்டினாய்டு, அல்கலாய்ட், முதலியவைகள் மற்றும் ஆக்சாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம் முதலிய கரிம அமிலங்களும் உள்ளன. கொழுப்பும், கார்போஹைடிரேட்டும் குறைவு. தாதுப்பொருட்களும், வைட்டமின்களும் அதிகம். எனவே வருமுன் காக்கும் உணவாக கீரைகளை சொல்லலாம்.

மலிவாகவும், எளிதாகும் கிடைக்கும் கீரைகளில் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. எனவே தினமும் 50 லிருந்து 100 கிராமாவது கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் கீரை அவசியம்.

ஆயுர்வேதத்தின் படி, நாம் உண்ணும் உணவில் ஒரு பகுதி உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒரு பகுதி ஜீரண சக்திக்கு (ஜாடராக்கினி) உதவுகிறது. இன்னொரு பகுதி சத்தாக மாறி உடலில் தங்குகிறது. மீதியுள்ள பகுதி மலமாக வெளியேறுகிறது. இந்த நான்கு செயல்பாடுகளுக்கும் காய்கறிகள் உதவுகின்றன. கீரைகள் குறிப்பாக ஜீரணிக்கவும் மலத்தை வெளியேற்றவும் உதவுகின்றன. பிற இரண்டு செயல்பாடுகளுக்கு (வளர்ச்சி, உடல் போஷிப்பு) கீரைகள் அவ்வளவு பயன்படுவதில்லை. எனவே காய்கறிகளையோ, கீரைகளையோ, தனி உணவாக உண்பதை ஆயுர்வேதம் தவிர்க்கச் சொல்கிறது. ஆனால் நவீன ஆராய்ச்சிகளின் படி கீரைகளை தனியாக உண்பதால் பல நன்மைகள் கிடைக்கும். 15 நாட்களாவது கீரையை காலை உணவாக தனி உணவாக உண்பது நல்லது. கீரைகளை இரவில் சாப்பிடக்கூடாது என்கிறது ஆயுர்வேதம். இரவில் ஜீரண சக்தி குறைந்திருக்கும். தூக்கத்தாலும், இரவின் குளிர்ச்சியாலும் ஜீரண சக்தி மந்தமாகிவிடும். இரவில் கீரை சாப்பிட்டால் கீரைப்பூச்சிகள் உண்டாகலாம். மலப்போக்கு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல் முதலியன ஏற்படலாம்.

ஒவ்வொரு வகை கீரையிலும் ஒவ்வொரு வகை சக்திகள் உண்டு. எனவே தினசரி கீரைகள் உண்பது முடியாவிட்டால் அடிக்கடியாவது விதவிதமான கீரைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

கீரைகளை வாங்கு முன் கவனிக்க வேண்டியவை

வாங்கும் கீரை புதிதாக, பசுமையாக இருக்க வேண்டும். மஞ்சள் நிற கீரைகளை தவிர்க்கவும். இலைகள் வாடி, வதங்கி இருக்கக் கூடாது.

'ஒட்டைகள்' உள்ள கீரைகளை தவிர்க்கவும். இவை கிருமி தாக்குதலால் பாதிக்கப்பட்டவை.

பருவத்திற்கேற்ற கீரைகள்

சித்தர்கள், அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப, உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கீரைகளை பட்டியலிட்டிருக்கின்றன.

எல்லா பருவங்களிலும் சாப்பிடக்கூடிய கீரைகள்

பொன்னாங்கண்ணிக்கீரை, கொத்தமல்லிக்கீரை, புதினா, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, கரிசிலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை.

தவிர்க்க வேண்டிய காரணங்கள்

இரவில் கீரைகளை உண்ணக்கூடாது. தலைக்கு குளித்த நாட்களில், சோகை உள்ளவர்களும், ஆஸ்துமா, சைனஸ் போன்ற கபநோய்கள் உள்ளவர்களும் கீரையை தவிர்க்க வேண்டும்.

கீரை ஒரு சாத்வீக உணவு மாமிச உணவுகள், மீன் உணவுகளுடன் கீரையை சேர்த்து உண்ணக் கூடாது. மலச்சிக்கல் வயிற்றுக்கோளாறுகள் ஏற்படும்.

கீரைகளை சமைக்கும் முறை

சமைக்கு முன் கீரை இலைகளை ஆய்ந்து, சுத்தமான குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும்.

வேக வைக்க, குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தவும். சமையல் சோடாவை சேர்க்கக் கூடாது. மாறாக சிறிதளவு புளித்தண்ணீரை தெளிக்கலாம்.

அரைக்கீரை

அரைக்கீரையின் தாவரவியல் பெயர் - Amaranthus Tristis

சமஸ்கிருதம் - மேக நாதா, இந்தி - லால் சாக், சும்லீ சாக்

தமிழின் இதர பெயர்கள் - சிறுகீரை, கிள்ளுக்கீரை, அறுகீரை இந்தியா முழுவதும் பயிராகும் அரைக்கீரை 30 செ.மீ. (ஒரு அடி) உயரம் வளரும் இந்த கீரையின் இலைகளும், இளந் தண்டுகளுமே உண்பதற்கு ஏற்றவை. இவற்றை அறுக்க அறுக்க மீண்டும் வளர்ந்து செடியாகும். எனவே இந்த கீரை 'அறுகீரை' என்றும் சொல்லப்படுகிறது.

பயன்கள்

உடலுக்கு வெப்பத்தைத் தரும். உடலுக்கு பலமளிக்கும்

பிரசவமான பெண்களுக்கு சக்தியை தரும்

நரம்பு தளர்ச்சியை போக்க அரைக்கீரை சாற்றில் மிளகை ஊற வைத்து, உலர்த்தி தூளாக்கி தினமும் 1/2 தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிடவும்.

அரைக்கீரை காமத்தை தூண்டும். கசகசா, தேங்காய்ப்பால், குடமிளகாய் இவற்றுடன் அரைக்கீரை சேர்த்து சமைத்து உண்ண ஆண்மை பெருகும்.

அரைக்கீரையை பருப்புடன் சேர்த்து 1 மாதம் சமைத்து சாப்பிட்டால் சோகை மறையும்.

அரைக்கீரை விதைகளிலிருந்து ஒரு வித தைலம் எடுக்கப்படுகிறது. விதைகளை தண்ணீர் நீக்கிய தேங்காயில் நிரப்பி (தேங்காயின் ஒரு கண்ணை திறந்து) பிறகு மரத்துண்டால் மூடி, சதுப்பு நிலத்தில் 40 (அ) 50 நாட்கள், புதைத்து வைக்கவும். பிறகு எடுத்து தேங்காய் உடைத்து அதில் உள்ளதை எடுத்து, நல்லெண்ணையுடன் கூட்டி எரித்து தைலம் வடித்து, தலையில் தேய்த்து முழுகி வர, தலை வலி தலை பாரம் போகும். தலை முடி கருகருவென வளரும். இந்த தைலம் கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.

மூட்டு வலி - நிவாரணம்பெற - பாட்டி வைத்தியம்

மூட்டு வலி - நிவாரணம்பெற - பாட்டி வைத்தியம்
*****************************************************************************
1) குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் வலி குணமாகும்.
2) கருவேப்பிலை, சுக்கு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் உணவுக்கு பிறகு ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்
3) உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை வெந்நீரில் கலந்து தடவினால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் குணமாகும்.
4) ஊமத்தை இலை, அரிசி மாவு இரண்டையும் சம அளவில் எடுத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து, கொதிக்க வைத்து பற்றுப் போட்டால் வீக்கம் குணமாகும்.
5) கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குணமாகும்.
6) கடுகு 30 கிராம், கோதுமை 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம். மூன்றையும் அரைத்து முட்டையின் வெள்ளைக்கருவில் கலந்து மூட்டுகளில் பூசினால் வலி குணமாகும்.
7) கடுகு கீரையை அரைத்து, நல்லெண்ணெயுடன் சேர்த்து தைலமாக காய்ச்சி கை, கால்களில் பூசிக் கொண்டால் மூட்டு பிரச்னை தீரும்.
8) அவுரி இலையை, விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி குணமாகும்.
9) அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூட்டு வாதம், மூட்டு வீக்கம் குணமாகும்.
ராகி புட்டு:
ராகிமாவுடன் சிறிதளவு உப்பு, தண்ணீர் கலந்து ஆவியில் வேக வைக்கவும். தேங்காய் துருவல், பாதாம், முந்திரி ஆகியவற்றை வெந்த ராகி மாவின் மேல் தூவவும். நெய்யில் உலர்ந்த திராட்சையை வறுத்து போடவும். இத்துடன் வெல்லப் பாகு தயாரித்து கலந்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் கிடைக்கும்.
இறால் பக்கோடா:
200 கிராம் இறாலை சுத்தமாகக் கழுவி, அதனுடன் சிறிதளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து ஊற வைக்கவும். பாசிப்பருப்பு மாவு 1/2 கப், கடலை மாவு 1/2 கப், அரிசி மாவு 1/2 கப் ஆகியவற்றைக் கலக்கவும். இந்த கலவையுடன் சோம்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, இஞ்சி பூண்டில் ஊறிய இறால் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து பக்கோடா பதத்தில் பிசையவும். இதை எண்ணெயில் பொறித்து சாப்பிடலாம். உடலுக்கு தேவையான தாதுக்கள் கிடைக்கும்.
சோயா சப்பாத்தி:
சோயா 100 கிராம் எடுத்து வெந்நீரில் கழுவி பிழிந்து அரைக்கவும். கோதுமை மாவு ஒரு கப், மைதா ஒரு கப் மாவை சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். அரைத்த சோயா, நறுக்கிய பச்சைமிளகாய், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனை சப்பாத்தியின் மேல் பேஸ்ட் போல தடவவும். இப்படியே தோசைக்கல்லில் சப்பாத்தி போல இரண்டு பக்கமும் வேகவைத்தால் போதும். இது கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்தது.
டயட்:
எலும்பின் வலிமைக்கு அவசியமாக இருப்பது கால்சியம், பாஸ்பரஸ். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் தேவையான அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இல்லாதபோது மூட்டுத் தேய்மானப் பிரச்னை தோன்றும்.பெண்களை பொருத்தவரை மாதவிலக்கு காலத்தில் அதிக ரத்தம் வெளியேறுவதால் மூட்டுப் பிரச்னைகள் வரலாம். மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வயது மூப்பின் காரணமாக 50 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூட்டுப் பிரச்னை இருக்கும். வயது அதிகம் ஆகும்போது உடலில் ரத்த உற்பத்தி குறைகிறது. இதனால் எலும்புகள் சத்துக் குறைபாட்டின் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறது. சிறு வயதினர் தினமும் சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு 450 மில்லி கிராம் கால்சியம் கிடைக்க வேண்டும். டீன் ஏஜ் பருவத்தில் 550 மில்லிகிராம் கால்சியம் அவசியம்.
சிறு வயதினருக்கு 800 மில்லிகிராம் பாஸ்பரஸ் மற்றும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு 1200 மில்லிகிராம் பாஸ்பரஸ் அவசியம். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் சத்துகள் இந்த அளவுக்கு இல்லாவிட்டால் 30 வயதுக்கு மேல் மூட்டுத் தேய்மானப் பிரச்னைக்கு ஆளாக நேரிடும். ராகி, இறால், மீன், சோயாபீன்ஸ், அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பால், பாலாடைக் கட்டி, வெல்லம், சிவப்பு பீன்ஸ், பாசிப்பருப்பு, கேரட், பாதாம், முந்திரி ஆகியவற்றில் இருந்து அதிகளவு கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது என்கிறார் உணவு ஆலோசகர்

Friday, February 27, 2015

திருநீற்று பச்சிலை (திருநீருபத்ரி)



திருநீற்று பச்சிலை (திருநீருபத்ரி)
*********************************************************************
நீண்ட காலம் பூக்காத தாவரங்களின் அருகில் இரண்டு திருநீற்றுப் பச்சிலை செடியை வைத்தால் மகரந்தச்சேர்க்கை நடந்து, விரைவில் பூக்கள் பூக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மூலிகை இந்தியா, இலங்கை நாடுகளில் அதிகளவு வளர்கிறது. இந்த இலையை கசக்கி முகர்ந்தாலே தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும். வாந்திகளுக்கு இது கைகண்ட மருந்து. குறிப்பாக, ரத்தவாந்திக்கு மிகவும் பயன்தரக்கூடியது. இதற்கு, உருத்திரசடை, பச்சை சப்ஜா என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.


பருக்கள் பட்டுப்போகும்
புண்கள், காயங்களுக்கு வெளிப்பூச்சாக இது பயன்படுகிறது. அஜீரணத்தைப் போக்கும் குணமுடையது. படர்தாமரை உள்ளிட்ட சரும நோய்களை குணமாக்கும். இதன் தைலத்தை தனியாகவோ, எண்ணெயில் சேர்த்தோ தலைக்கு வைத்து குளித்தால் பேன், பொடுகு பறந்து போகும்.
பருவ வயதுடையவர்களின் முக்கிய பிரச்னை முகப்பரு. குறிப்பாக இளம் பெண்கள் பருக்களை ஒழிக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து கண்ட கண்ட அழகுசாதன முகப்பூச்சுகளை வாங்கித் தடவுகிறார்கள். சிலர் பருக்கள் உடனே போக வேண்டுமே என்பதற்காக, அளவுக்கு அதிகமாக முகப்பூச்சுகளை தடவுகிறார்கள். இதனால் பரு இருந்த இடம் சூட்டினால் வெந்து, கருப்பு நிறத்துக்கு மாறி விடுகிறது. பணத்தை கொடுத்து, பாதிப்பை ஏன் வாங்க வேண்டும்.
மனிதகுலம் வளமாக வாழத் தேவையான அனைத்தையும் படைத்த இயற்கை, இதற்கொரு தீர்வு வைத்திருக்காதா.. என்ன? அப்படிப்பட்ட தீர்வுதான் திருநீற்றுப் பச்சிலை. வீடுகளில், தொட்டிகளிலோ, புறக்கடையிலோ ஒரே ஒரு செடி இருந்தால் போதும், உங்கள் முகப்பரு பிரச்னை இட்ஸ் கான்... என ஆனந்த கூச்சல் இடுவீர்கள்.
தேவையற்ற நீரை வெளியேற்றும்
இதன் இலையை கசக்கி, சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். சாதாரண பருக்கள் மட்டுமல்ல.. புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும். அதேபோல கண்கட்டி உள்ளிட்ட சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதன் சாறு அருமையான நிவாரணி. இதன் விதைகள் குளிர்பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுகின்றன.
இதன் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
ஆண்டி ஆக்ஸிடெண்ட்
பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவற்றை தவிர, சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.
இதனால் இந்த மூலிகை ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு நோய்க் கிருமிகளை அழிக்கிறது. இன்னும் பல நோய்களுக்கும் திருநீற்றுப் பச்சிலையில் தீர்வு காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்.