Saturday, March 9, 2019

திரிபலா சூரணம் நன்மைகள்

திரிபலா சூரணம் நன்மைகள்

நெல்லிக்கனி.நெல்லிக்கனியின் மருத்துவகுணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறுநெல்லி, பெருநெல்லி என்று இரண்டுவகை இருக்கிறது இதில் பெருநெல்லிதான் அதிக மருத்துவ குணம் கொண்டது. இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில்  கிடைப்பதில்லை.ஆனால் முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும் முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக் கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். ஆண்டி-ஆக்ஸிடேன்ட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு. மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு,  அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் வைட்டமின் 'சி',உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ளன. 75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லி கிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும்,  இரும்புச் சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக் கனியின் மருத்துவகுணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின்-சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச்சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின்-சி சத்து உடலில் உள்ள இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. இதய வால்வுகளில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

கண்நோய்கள்தீர

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வந்தால் கண்புரை நோய்,  கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

பல்வலி, ஈறு நோய்களுக்கு

தான்றிக்காய் பொடியினால் சிலந்திநஞ்சு, ஆண்குறிப்புண், வெள்ளை, குருதியழல் நோய் நீங்கும். பல்வலி தீரும். தான்றிப் பொடியைத் தேனில் கலந்து கொடுக்க அம்மை நோய் நீங்கும். தான்றிக்காய் பொடியினால் கண் ஒளி பெருகும். புண்பட்ட இடத்தில் இதன் பருப்பை உரைத்துப்பூச புண்ணாறும். இதன் கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துப் பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, இரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும். தான்றிப்பொடி 3 கிராமுடன் சமன் சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிட பித்த நோய்கள், வாய்நீர் ஒழுகல் தீர்ந்து கண்பார்வை தெளிவுறும். தான்றிக்காய் தோலை வறுத்துப் பொடித்து தேனுடனோ சர்க்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட இரத்தமூலம் நிற்கும். தான்றிக்காய் தோலை சேகரித்து சூரணம் செய்து கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து தினசரி சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும். தான்றிக்காயைச் சுட்டு மேல் தோலை பொடித்து அதன் எடைக்குச் சமமாய் சர்க்கரை கலந்து தினம் காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல்வலி, ஈறுநோய்கள் போன்றவை குணமாகும்.

அடிபட்ட காயங்கள் புண்களை ஆற்ற

கடுக்காய் துவர்ப்புச் சுவை அதிகமாகவும், இனிப்பு, புளிப்பு, கார்ப்பு மற்றும் கசப்பு சுவைகள் குறைவாகவும் இயற்கையாகவே ஐம்பெரும்பூதங்களின் ஒருங்கிணைப்பாய்க் காணப்படும் கடுக்காயானது வாத, பித்த மற்றும் கப மாறுதல்களினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்கும். கடுக்காயில் கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய் மற்றும் பால்கடுக்காய் என்று நான்கு வகைகள் உண்டு. இவை நான்கும் உடலை அழிவிலிருந்து காக்கும் கற்ப மூலிகைகளாகக் கருதப்படுகின்றன. இமயமலைப் பகுதிகளில் தவத்திலிருக்கும் தவமுனிவர்கள் இவற்றைத் தேடி உண்பதாகக் கூறப்படுகிறது. தேவமருத்துவராகக் கருதப்பட்ட தன்வந்திரி பகவான் தம்மிடம் எப்போதும் கடுக்காய் வைத்திருந்தார். கொட்டை நீக்கியகடுக்காய் 10 கிராம் அளவு எடுத்து 2 குவளை தண்ணீரில் கொதிக்க வைத்து 1/2 குவளை அளவு சுருக்கி வடித்துச் சாப்பிடுவதால் அடிக்கடி நீர் பிரிவது கட்டுப்படும். புண்களைக் கழுவ புண்கள் ஆறும். வாயிலுள்ள புண்களுக்கு கொப்பளித்தால் ஆறும்.

கண் பார்வை தெளிவு பெறும்

முன் சொன்ன நெல்லிக்கனி, கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் முறைப்படி  கலந்த மருந்துக்கு திரிபலாசூரணம் என்றபெயர். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைப் பொருட்களை நன்றாகப் பொடித்து, திரிபலாசூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூரணத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட்டு அதற்குப் பிறகு பசும்பால் சாப்பிடுவது கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

சாப்பிடும் முறை

திரிபலா சூரணம் பயன்படுத்தும் முறை: மேற்சொன்னபடி நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை இரவு உணவு முடித்த பிறகு ½ மணி நேரம் கழித்து 1 டம்ளர் வெதுவெதுப்பான (Luke-Warm Water) நீரில் 1 டீஸ்பூன் அளவு (5 கிராம்) எடுத்து நன்றாக கலக்கி அருந்தவும்.

தீரும் நோய்கள்: ஒரே நாளில் மலச்சிக்கலும், மற்றும் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அவர்கள் சாப்பிட்டு வரும் மருந்துகளோடு துணை மருந்தாக சாப்பிட்டு வர சர்க்கரைநோய் தொடர்பான உடல் உபாதைகள் குறையும். நாம் சாப்பிடும் ஆங்கில மருந்துகளின் எதிர்விளைவுகளை (Side Effects) குறைக்க திரிபலா சூரணம் தினமும் சாப்பிட்டு வரலாம். திரிபலா சூரணம் தினம் சாப்பிட்டு வர நம் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நமக்கு வரும் பெரும்பாலான 100 க்கும் மேற்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

இந்தச் சூரணத்தை முறைப்படி சாப்பிடுவதால் வாயுத்தொல்லை, உணவு செரிக்காத தொல்லை, மலச்சிக்கல், உடற்சூடு, மூல எரிச்சல், வயிற்றுப் புண், இரத்தக் குறைவு, வெண்குட்டம், கண் நரம்பு நலக்குறைவு ஆகிய நோய்கள் தீரும். சர்க்கரை நோய் தீரும். தொப்பை, உடல் எடை குறையும்.

1 comment: