Tuesday, August 23, 2016

மாத விலக்கும், நோய்களும்!

மாத விலக்கும், நோய்களும்! 

 பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் மாதவிலக்கின் போது ஏற்படும் வலி மற்றும் குருதிப் போக்கு போன்றவை இயல்பான உடல் இயங்கியல் நிகழ்வுதான் என்றாலும் கூட, சமயங்களில் தாங்க இயலாத வலியும், கட்டுப் பாடில்லாத குருதிப் போக்கும் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் இவை மாதவிலக்கு தொடர்பான வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். இவற்றில் முதன்மையானது கிருமித் தொற்றினால் ஏற்படும் அழற்சி (Inflammation). கருவறையின் வாயிலில், கருவறையின் உட்புறத்தில் இத்தகைய அழற்சிகள் ஏற்படலாம். இதனால் இந்த உறுப்புகள் வீங்கி, புண்ணாகும் போது ஆரம்பத்தில் வலியையும், பின்னர் வலியுடன் கூடிய குருதிப் போக்கினையும் உருவாக்கும். மேலும் முறையற்ற உடல் உறவினாலும் பாலியல் தொடர்பான கிருமித் தொற்றுகளினாலும் நோய் உண்டாகும்.இவ்வாறு உருவாகும் நோய்களை  ”Pelvic inflammatory disease” என்கின்றனர். இவை தவிர கருவறையின் உட்புறச் சுவற்றில் “Fibroids” எனப்படும் தசைநார் கட்டிகள் வளரும் வாய்ப்பு உள்ளது. இதனாலும் அதிக அளவில் குருதிப் போக்கு உண்டாகும். இவற்றின் தன்மை மற்றும் அளவினைப் பொறுத்து அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றிவிடலாம். பெண்களின் சூலகத்தில் முதிர்வடையாத கரு முட்டைகள் நிறைந்திருக்கும். இவற்றை வளர்ச்சியடையச் செய்யும் இயக்க நீர்மமான Follicle-stimulating hormone தேவையை விட குறைவாக சுரக்குமானால் இந்த கருமுட்டைகள் வளராமல் சூலகத்தில் தேங்கிவிடும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லாது போகும். இத்தகைய பெண்களுக்கு உடல் எடையும் அதிகரிக்கும். வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களில் கணிசமானவர்கள் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாய் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. மாதவிலக்கு சுழற்சியில் கருமுட்டையை ஏந்தி பாதுகாத்திட கருவறையின் உட்புறத்தில் பஞ்சு போன்ற கோழைப் படலம் உருவாகி பின் அழியும் என பார்த்தோம். சிலருக்கு கருவறையின் வெளிப்புறத்திலும் இத்தகைய கோழைப் படலம் உருவாகி அழியும். இதனை புற கருவறை வளர்ச்சி “Endometriosis” என்கிறோம். இத்தகையவர்களுக்கும் கடுமையான வலியுடன், குருதிப் போக்கும் அதிகமாய் இருக்கும். முறையான மருத்துவ ஆலோசனையின் பேரில் இதற்கான தீர்வுகளை காணலாம். தற்போதைய அவசரயுகத்தில் தங்களுடைய தேவைக்காக மாதவிலக்கினை தள்ளிப் போடும் மருந்துகளை சிலர் எடுத்துக் கொள்கின்ற்னர். அவர்களுக்கும் மாதவிலக்கின் போது மேற்சொன்ன பிரச்சினைகள் வரும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதினாலும் கடுமையான உடல் உபாதைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இவை தவிர சூலகத்தில் உருவாகும் நீர்ம கட்டிகள், முழுமையாக வளர்ச்சியடையாத கருவறை, உடல் சுத்தம், வாழ்வியல் சூழல், உளவியல் கூறுகள் போன்றவைகளும் மாதவிலக்கு சுழற்சி தொடர்பான உபாதைகளுக்கு காரணமாகின்றன. இவை குறித்த முழுமையான விழிப்புணர்வு பெரும்பான்மையான பெண்களிடத்தில் இல்லை என்பது வருத்தம் தரும் உண்மை. இயல்பான உடல் இயங்கியல் நிகழ்வான மாதவிலக்கில் ஏற்படும் குறைபாடுகளை உரிய சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ள முடியும். அதற்கு தற்போதைய நவீன மருத்துவம் பல்வேறு தீர்வுகளை முன் வைக்கின்றன. எனினும் நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர் என்பதை பகிர்வதே இந்த தொடரின் நோக்கம் என்பதனால் இனி வரும் நாட்களில் சித்தர் பெருமக்கள் இது தொடர்பில் அருளிய சில தீர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன். 

No comments:

Post a Comment