Wednesday, August 29, 2018

விதைகளின் பயன்கள்

விதைகளின் பயன்கள்

மருத்துவ ரீதியாக விதைகள் என்பவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. புற்றுநோய் போன்ற பல கொடிய நோய்களைத் தீர்க்கும் வல்லமையும் விதைகளுக்கு உண்டு.

கழற்சிக்காயின் விதை அண்டவாதம் என்ற விதை வீக்க நோய்க்குச் சிறந்த மருந்தாகும். இதன் விதைகளை பொடித்து பெருங்காயம் சிறிது சேர்த்து மோரில் கலந்து குடிக்க, குன்மம் என்ற வயிறு அல்சர் குணமாகும்.

பூனைக்காலி விதையில் விதை ஒரு சிறந்த நரம்பு டானிக். பார்க்கின்ஸன் நோய் என்ற நடுக்குவாதத்திற்கு பூனைக்காலி விதைகளால் நல்ல குணம் கிடைக்கிறது. மேலும் இந்த விதைகளால் விந்துவின் எண்ணிக்கையும், அதன் தரமும் அதிகரிக்கிறது. விதைகளை பொடித்து பாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் குடிக்க நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

கருஞ்சீரக விதைகள் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். தோலில் உண்டாகும் அரிப்பு, படை இவற்றிற்கு கருஞ்சீரக விதைகள் சிறந்த மருந்தாகும். மேலும் இது ஒரு சிறந்த புழுக்கொல்லி மருந்தாகும். இந்த விதைகளை அரைத்து நல்லெண்ணெயுடன் குழப்பி தோல் நோய்களுக்கு வெளிப் பிரயோகமாக பயன்படுத்த கரப்பான், சொறி, அரிப்பு முதலிய தோல் நோய்கள் குணமாகும்.

எட்டி விதைகள் நரம்புக்கு ஊட்டம் அளிக்கும். உடலில் ஏற்படும் எல்லாவிதமான வாத நோய்களுக்கும் இந்த விதைகளைக் கொண்டு செய்யப்படும் தைலங்கள் பயன்படுகிறது. பக்க வாதம், மூட்டுவாதம், கீல்வாதம் போன்ற நோய்களுக்குச் சிறந்த தைலமாகப் பயன் தருகிறது.

ஆமணக்கு விதைகலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் என்றழைக்கப்படுகிறது. இது ஒரு சிறந்த மலமிளக்கியாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த எண்ணெயை தினமும் படுக்கைக்குப் போகும் முன் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர மலம் எளிதாக கழியும். மேலும், இந்த எண்ணெயானது உடம்பிற்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

தேற்றான் விதை என்ற பெயரில் இருந்தே இது ஒரு சிறந்த டானிக் என்று அறிய முடிகிறது. இது கண்ணுக்கு நன் மருந்தாகும். இந்த விதைகளை நீரில் உரைத்துக் கரைத்தால் அந்நீர் தெளிந்து நிற்கும். தேற்றான் விதைக் குடிநீர் நீரிழிவு நோயிற்கு நல்ல மருந்தாகும். விதைகளை பொடித்து பாலில் கலந்து கொடுத்தால் நீர்ச்சுருக்கு, நீரிழிவு நோய் குணமாகும்.

எள் விதைகளிலிருந்து நல்லெண்ணெய் பெறப்படுகிறது. இந்த எண்ணெயினால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகிறது. தலைக்கொதிப்பு, சொறி, சிரங்கு, தினவு,படை, புண் போன்ற நோய்கள் நீங்கும். நல்லெண்ணெயினால் தலைக்குத் தேய்த்து முழுகி வர, கண் சிவப்பு, கண் வலி, கண் கூசல், மண்டை குத்தல் முதலியன நீங்கும்.

ஓமத்திலிருந்து செய்யப்படும் ஓமத்தீநீரினால் வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, மந்தம் முதலிய நோய்கள் குணமாகின்றன.

புங்கு விதையினால் கால் புண், கிரந்தி, காது நோய் நீங்கும்.காட்டு புங்கின் விதையினால் தேமல், படை, கீல்களில் வரும் வாத  நோய்கள் தீரும்.

வெள்ளரி விதையினால் கடுக்கிற நீரடைப்பு, கல்லடைப்பு, நீர்ப்புழை வெடிப்பு, சதையடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மேலும், இது ஒரு  சிறந்த சிறுநீர் பெருக்கியாகும். இதனால் நம் உடம்பில் தேங்கியுள்ள நீர் வீக்கமானது குறைந்து உடல் நன்னிலைக்கு திரும்பும்.

வெண்பூசணி விதைகள் மிகச் சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாகும். மேலும் உடலைத் தேற்றக் கூடிய டானிக். இதன் விதைகளை அரைத்து வெறும் வயிற்றில் கொடுத்து விட்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து ஆமணக்கு எண்ணெய் கொடுக்க வயிற்றில் உள்ள தட்டைப்புழுக்கள் வெளிப்படும்.

தர்ப்பூசணி விதை, உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிக்கும். நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். இதன் மேல் தோலை நீக்கி, காயவைத்து நெய்யில் வறுத்து, உப்பு, மிளகு சேர்த்து உணவோடு சேர்த்து சாப்பிடலாம். விதைகளில் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரதச் சத்து போன்ற பல சத்துகள் காணப்படுகிறது.

No comments:

Post a Comment